மும்மலங்கள்
*****************
இத்தொடரில் வேதாந்த தத்துவங்கள் (த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்) பற்றிய சிறுகுறிப்பு எழுதி இருந்தேன். இந்த மூன்றையும் வைதீக மதங்கள் என்று சொல்வர்.
அத்வைதத்தில் சிவன் முக்கிய தெய்வமாக இருக்கும் வைதீக மதம் காஷ்மீர சைவம் (Kashmiri Shaivism), இதன் சாயல் நாடெங்கும் சிவனை வணங்கும் பிரிவினரிடையே பரவியுள்ளது.
ஆனால் வைதீக அடிப்படை இல்லாமல் நமது தென்னிந்திய சைவ மதம் இருக்கிறது.
வேதம் சொல்லும் பல கருத்துக்களை உள்ளடக்கி சுருக்கி இருப்பினும், இது தென் இந்தியாவில் தோன்றியது, வேத காலத்துக்கு முன் தோன்றியதாகவும் ஒப்புக் கொள்ளத் தக்க வாதங்கள் உண்டு.
சைவ சித்தாந்த பதினான்கு நூல்களில் மிக முக்கியமானது மெய்கண்ட தேவர் எழுதிய *சிவ ஞானபோதம்* ஆகும். இவருக்கு முன்னர் வந்த நூல்கள் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் நூல்கள்.
*தென்னிந்திய சைவ மதம் சைவ சித்தாந்தம்* எனப்படும். பின்னர் நம் தொடரில் அவ்வப்போது இந்த சித்தாந்தம் பற்றிய தகவல்கள் இடம் பெறலாம்.
பதி, பசு, பாசம்
சைவ சித்தாந்த தத்துவம் பதி, பசு, பாசம் என்ற மூன்றை என்றும் நிலைத்துள்ள பொருளாக சொல்கிறது.
பதி=இறைவன், அதாவது சிவன் (இந்த சிவன் பரமசிவன், மும்மூர்த்திகளில் ஒருவர் அல்ல, அதாவது இவர்தான் இறைவன்);
பசு=உயிர்கள் (மனிதன், ஜீவராசிகள்); (அதனால் பசுவை ஆளும்பதியான சிவன் பசுபதி எனப்படுகிறார்.);
பாசம்= மலங்கள். பந்தபாசம் என்னும் பாசமல்ல., அன்பும் பிரியமும் இல்லை. பாசக் கயிற்றில் வரும் பாசம் இது. அதாவது பாசம் என்பது தளை. தளை என்பது நம்மைக் கட்டிப்போடுவது.
இந்த மலங்கள் ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் ‘இருள்’ என்ற சொல்லால் பேசப்படும்.
மாயையும் இயற்கையும்
கன்ம மலம் என்பது வடமொழியில் கர்மாவால் வரும் விளைவு. இது வினைப்பயன்.
வினைப்பயன் பழவினை. நுகர்வினை, வருவினை என மூன்று. பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல், இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி), இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.
மூன்றாம் மலம் மாயை. இந்த மாயை என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு சொல். மாயையின் முழுப்பொருள் கண்டவர் யாரும் இவ்வுலகில் உள்ளனரா என்பது ஐயம்.
இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது..
பிரகிருதி என்று கூறப்படும் உலகம் மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது என்று சைவசித்தாந்தம் சொல்கிறது. இது அத்வைதம் சார்ந்த ஆதிசங்கரர் மொழிந்த மாயாவாதம் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறது என்பது உணரலாம்.
எதற்கு இவ்வளவு சொல்கிறேன். தன்னை யறிந்தபின் நம்முள் இருக்கும் இறைவனை அறியலாம் என்று சொல்லத்தான்.
நம்முள் எப்படி இறைவன் புகுந்தான் ? தந்தையிடம் இருந்தா, அல்லது தாயிடம் இருந்தா ? இரண்டும் இல்லை. தந்தை தாய் இருவரின் அன்பின் விளைவாக நாம் நம் அன்னை வயிற்றில் இருக்கும் போது நுழைகிறான்.
ஒரு உபநிஷதம் கருவில் இருக்கும் குழந்தையின் உச்சித்தலை வழியாக இறைவன் உள்ளே நுழைகிறான் என்று சொல்லும்.
குழந்தையின் உச்சித்தலையில் SOFTSPOT என்று ஒன்று உண்டு. அதில் விரல் வைத்துப் பார்த்தால் இதயத்துடிப்பு கையில் தெரியும். இந்த இடம் வழியேதான் கருப்பையில் நீரில் மிதக்கும் சிசு நீரில் இருந்து காற்றைப் பிரித்து பிராணவாயுவை உட்கொள்கிறது. பிரசவம் ஆகும்போது தலை வெளியே வந்தவுடன் நீரில் இருந்து பிராணவாயு உட்கொள்வது நின்றுவிடும். உள்ளே வெற்றிடம் ஏற்பட்டு நுரையீரல் தவிக்கும் காற்றில்லாமல். அப்போதுதான் குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் ஏற்படும். அந்த அழுகையின் பொது உட்செல்லும் காற்றுதான் குழந்தையின் நுரையீரல் முதன்முதலில் பெறும் வெளிக்காற்று.
எந்த மாதம் கருவின் உடலில் உயிர்புகும் என்று பல விளக்கங்கள் இருக்கின்றன.
இப்படி நுழையும் இறைவன் தான் நம் ஆன்மா. நம் ஆன்மா என்பது நம் உயிருக்கும் மேலானது.
அந்த ஆத்மாதான் அழிவு இல்லாதது. அழிக்க முடியாதது. அதைத்தான் கீதையின் இரண்டாம் அத்தியாயம் சொல்கிறது.
ஆன்மாவை அறிதல்
உடல், மனம், பிராணன், ஆன்மா என்று பலவற்றின் தொகுதி நாம். இவற்றில் ஆன்மா தவிர மற்ற மூன்றும் மாறுபவை, அழிபவை. ஆன்மா இறைவனில் இருந்து வந்தது.
இதயக்குகையில் உறையும் அந்த ஒளிமயமான ஆன்மாவே வாழ்க்கையின் மேலான லட்சியம்.
ஆன்மா அறிவுக்குப் புலன் ஆகாது. மனத்தால் உணர வேண்டிய ஒன்று.
எதை வைத்து ஆன்மாவை அறியலாமோ அந்த மேலான ஒன்றை கீதை தெய்வீகக் கண் என்று சொல்கிறது (கீதை 11.8). இது ஒரு உணர்வு நிலை மாற்றம். ஐம்புலன் களைக் கொண்டு அறிய முடியாததை இந்த உணர்வு நிலை அறியவைக்கும்.
இந்த ஆன்மா ஒளிமயமானது, அணுவிலும் அணுவானது. அழிவற்றது. இறை எண்ணங்கள் கூடிய ஒருமித்த தியானத்தால் அந்த இலக்கான இறைவனை, ஆன்மாவை அறிய இயலும். அலைபாயாத மனத்துடன் ஒரு அம்பு போல எண்ணச் சக்தி ஆன்மாவை நோக்கிப் பாயும்.
ஒளிமயமான இதயத்தில் உள்ள வெளியில் இறைவன் ஆன்மாவாக உறைகிறார். உடல் முழுதும் வியாபித்து நம்மை நடத்துகிறார். இந்த இதயக்குகையில் தான் ஆன்மா ஒளிர்கிறது. இடதுபுறம் இருக்கும் பெளதீக இதயம் அல்ல இது.
சாந்தோக்ய உபநிஷதம் நம் உடலில் தாமரை போன்ற சிறு மாளிகையில் உள்ள அகவெளியில் ஆன்மா உள்ளது என்று சொல்கிறது. ஸ்ரீ நாராயண ஸூக்தம் என்னும் வேத மந்திரம் மூன்று அடையாளங்கள் சொல்கிறது:
(அ) ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது, இடது புறத்தில் அல்ல;
(ஆ) சுடர் வரிசையால் சூழப்பட்டு உள்ளது;
(இ) இந்த இதயம் பிரகாசிக்கிறது.
இந்த ஆன்மாவைக் காணும் தரிசனம் மூன்று முக்கிய பலனைத் தரும்:
(அ) மனக் குழப்பங்கள் அகல்கின்றன
(ஆ) சந்தேகங்கள் விலகுகின்றன
(இ) வினைப் பயன்கள் அழிகின்றன.
இறைவனை நோக்கிச் செல்வதில் இருந்த தடைகள் அனைத்தும் இவ்வாறு நீங்கப் பெற்றவன் இறைவனை நாடுகிறான்; இறையனுபூதி பெறுகிறான். (1)
ஆக இவ்வாறு நாம் ஆன்மாவை அறியத் தொடங்கி ஆற்றும் உள்முகப்பயணம் நமக்குள் இறைவனைக் காணும், உணரும் பேற்றைப் பெற்றுத் தருகிறது. இதுதான் திருமூலர் சொன்னதும்.
மறுபடி அந்த தமிழ் மந்திரம் இங்கே:
தன்னையறியத் தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்
தன்னையறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே
திருமூலர் இறைவன் மனிதனின் உடலில் மறைந்து இருப்பதை பல இடங்களில் பேசுகிறார்.
உள்ளம் பெரும் கோவில், ஊனுடம்பு ஆலயம்.